பரீட்சை காலத்தில் மின்சார தடையை இடைநிறுத்த முடியாது – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
Friday, January 27th, 2023உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை அமுலாக்காமல் இருக்க முடியாது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அவ்வாறு மின்வெட்டினை அமுலாக்காது இருக்க வேண்டுமாக இருந்தால், அதற்கான கிரயத்தை சமாளிப்பதற்கான நிதி வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி வழங்கப்படாமல், மின்சார தடையை இடைநிறுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை அமுலாக்காதிருக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டது. ஆனால் நேற்றும் நாட்டில் பரவலாக மின்தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சட்டக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, உறுதிபாட்டை மீறி மின்தடை அமுலாக்கப்படுமாக இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார சபையை எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் தலைவர் இந்த காலப் பகுதியில் மின்தடையை நிறுத்துவதாக இருந்தால், அதற்கு 4.1 பில்லியன் ரூபாய் மேலதிக தேவையாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|