நேர்மையுடன் கடமைகளை முன்னெடுக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க விசேட சட்ட வரைவு – துறைசார் தரப்பினருக்குபிரதமர் பணிப்பு!

Wednesday, July 14th, 2021

அரச மற்றும் பகுதிநிலை அரச ஊழியர்களினால் கடமைகள் நிறைவேற்றப்படும்போது, நேர்மையுடன் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமைய, அவர்களுக்கு உரிய பாதுகாப்பளிக்கும் வகையில் சட்ட வரைவுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச மற்றும் பகுதிநிலை அரச ஊழியர்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, தொடர்புடைய சட்ட வரைவுகளை தயாரிப்பதற்கு ஆதரவளிக்கும் முகமாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உள்ளிட்ட குழு நியமிக்கப்பட்டு, அதற்கான பரிந்துரைகளை ஒருமாத காலப்பகுதிக்குள் வழங்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

2019 நவம்பர் 27 ஆம் திகதிக்கான அமைச்சரவை தீர்மானத்திற்கமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட வரைஞர் தில்ருக்ஷி சமரவீர மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் விவேகா சிறிவர்தன ஆகியோர் இதன்போது தெளிவுபடுத்தினர்.

அதிகாரிகளுக்கான சட்ட கட்டமைப்பிற்கு அப்பால், நேர்மையுடன் கடமைகளைச் செய்ய அனுமதிக்கக்கூடிய வரம்புகளை அடையாளம் கண்டு, அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக நிறுவனத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.

இதற்கமைய தயாரிக்கப்பட்ட வரைவொன்றை அமைச்சரவை பத்திரமாக சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: