நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் குறைந்தது 18 மாதங்கள் தேவை – வல்லரசுகளின் ஆதரவும் வேண்டும் என பிரதமர் தெரிவிப்பு!

Monday, June 13th, 2022

தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் சுமார் 18 மாதங்கள் ஆகும் என அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது பாரிய டொலர் நெருக்கடி மற்றும் வெளிநாட்டு கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் அதிலும் சில சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் சபை கூறியது போல, இலங்கை முழுக்க முழுக்க அவசரநிலையை எதிர்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

ஆகவே உலக வல்லரசுகளின் ஆதரவு இலங்கைக்கு தேவை என்பதோடு நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இலங்கை மீண்டும் உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாற்ற, நிதி நிலைமையை உறுதி செய்வதில் தான் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அத்தோடு பொருளாதார மறுசீரமைப்புடன், நாட்டை ஸ்திரப்படுத்தும் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கூடிய விரைவில் நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: