நாளை அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறை இரத்து.!

Sunday, May 22nd, 2016

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள அனர்த்த காலநிலையைக் கருத்திற்கொண்டு நாளை அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறை வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் இரத்துச் செய்துள்ளதாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் வெசாக் போயா தினத்தை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது.

எனினும் தற்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இடம்பெற்று வரும் பாதிப்பபுகளை கருத்திற்கொண்டு திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் முடிவை அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது.

அசாதாரண காலநிலைச் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் இந்த முடிவை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையே அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்களான பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் யாரேனும் இயற்கைச் சீற்றம் காரணமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில் அவர்களின் பணியை ஏனைய அதிகாரிகள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts: