நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அறிவிப்பு – சுகாதார அமைச்சின் சுகாதார வழிகாட்டியும் வெளியானது!

Wednesday, September 22nd, 2021

கொரோனாத் தொற்று பாதிப்புக்களில் இருந்து நாடு மீண்டு வருவதால் பாடசாலைகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

இதன்படி, பாடசாலைகளை மீளத் திறத்தல் மற்றும் பின்பற்றவேண்டிய சுகாதாரா நடைமுறைகள் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல் அடங்கிய பரிந்துரைகளை கல்வி அமைச்சிடம், சுகாதார அமைச்சு நேற்று  கையளித்திருந்தது.

இதன்படி, முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆரம்ப வகுப்புக்களை சேர்ந்த மாணவர்கள் மன ரீதியில் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளமையினால், குறித்த பிரிவுகளுக்கான வகுப்புக்களை முதலில் ஆரம்பிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆரம்ப வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான இணைய வழி கல்வி முறைமை வெற்றியளிக்கவில்லை எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையில் முதலாம் கட்டமாக  தரம் 1 முதல் தரம் 5 வரையான 200 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்ப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக தரம் 1 முதல் தரம் 5 வரையான 200 மாணவர்களுக்கு அதிக மாணவர்களை கொண்ட அனைத்து பாடசாலைகளும், அனைத்து பிரிவுகளிலும் 100 க்கு குறைவான மாணவர்களை கொண்ட அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

இதேநேரம் மூன்றாம் கட்டமாக அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13ம் தர வகுப்புக்களும், 200க்கு குறைவான மாணவர்களை கொண்ட அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட வேண்டும் என்பதுடன் நான்காம் கட்டமாக அனைத்து வகுப்புக்களும் திறக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது..

இதேவேளை ஒரு கட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமாயின், வைரஸ் தொற்று தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகனத்தினர் மற்றும் மாணவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படும் அனைவரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அவ்வாறு பெற்றுக்கொள்வதற்கு ஏதேனும் பிரச்சினை காணப்படுமாயின், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியை தெளிவூட்ட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கொவிட் தொற்றுக்கான நோய் அறிகுறிகளுடனான மாணவர்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில், மேலதிக சிகிச்சைகளுக்காக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய, சிறுவர் நோய் அல்லது தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர்களிடம் காண்பிக்க வேண்டும்.

தொற்றுக்குள்ளான சிறார்களுக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட வேண்டுமாயின், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: