நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் – சுகாதார அமைச்சர் கெஹலிய அறிவிப்பு!

Wednesday, August 18th, 2021

நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே அரசாங்கம் தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், – “நாடு பல மாதங்கள் மூடப்பட்டதன் பின்னரே திறக்கப்பட்டது. சுமார் 15 இலட்சம் அரச ஊழியர்கள் கடைமையாற்றுகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது.

எனினும் சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு நாளாந்த வருமானத்தை பெறுவோர் தொடர்பில் எவரும் வாய் திறப்பதில்லை.

கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதும் சுகாதார ஆலோசனைகளை கடைபிடிப்பதும் ஆகும்.

உலகில் பலமிக்க பொருளாதார வல்லமை கொண்ட நாடுகள்கூட கொரோனா தொற்று காரணமாக ஆரம்பத்தில் நாட்டை மூடிய போதிலும் மீண்டும் நாட்டை திறந்ததனால் இந்த தொற்றை எதிர்கொள்ள நேரிட்டது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த போதிலும் அரசாங்கம் அது தொடர்பில் நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: