நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்ல சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, February 7th, 2024

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஏனைய நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

போட்டித்தன்மை வாய்ந்த புதிய சந்தைகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு இலங்கையின் பொருளாதாரத்திற்கு நேரடியாகப் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. உலகில் பாரிய அளவில் சந்தை வாய்ப்புகள் உள்ளதுடன், அபிவிருத்தி அடைந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் அந்தப் பாரிய சந்தை வாய்ப்புகளை சிறப்பாகக் கையாள்வதன் மூலம் தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளன.

வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் தற்போது உலகின் பாரிய சந்தைகளுடன் சுதந்திர பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை அடைந்துள்ளன.

1991ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் சுமார் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

அதே காலகட்டத்தில் பங்களாதேஷ் மற்றும் வியட்நாமின் ஏற்றுமதி வருமான அதே அளவில் இருந்தது.

எனினும், 2022ஆம் ஆண்டில் வியட்நாமின் ஏற்றுமதி வருமானம் 373 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாறியுள்ளது.

அந்த நாடுகளின் ஏற்றுமதிப் பொருளாதாரம் வலுப்படுத்தப்பட்டமையே இதற்கு பிரதான காரணமாகும்.

எனவே, தற்போது ஆசிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தி, நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நீண்ட கால வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்த முயற்சிகள் வெற்றியடையுமாயின் நாட்டுக்கு வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தை உருவாக்க முடியுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதில் உறுதியாக உள்ளோம் - குடியரசு தின செய்தியில் இந்தியா த...
வவுனியா காஞ்சூரமோட்டை கிராம மக்களுக்கான மின்சார வழங்கலில் ஏற்பட்டிருந்த இடர்பாடுகளுக்கு ஈ.பி.டி.பியி...
எல்லைதாண்டி காரைநகர் கடற்பரப்பில் மீன்பியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!