நாடாளுமன்ற உறுப்பினர்களை துன்புறுத்த முயற்சித்ததாலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, May 5th, 2022

நாடாளுமன்றத்திற்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொச்சைப்படுத்தி அவர்களை துன்புறுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று முயற்சித்ததாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது தொடர்பில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதேநேரம், சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளிப்பதற்காக வந்த இளைஞர்கள் குழுவொன்று மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது சட்டவிரோதமானது என்று கூறிய அவர், கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: