நவீன யுகத்தில் இலங்கை – இந்தியா இடையிலான பொருளாதார மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டு!

Thursday, September 16th, 2021

நவீன யுகத்தில் இலங்கை – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் லோக்சபாவினால் வீடியோ தொழில்நுட்பம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் இலங்கையின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையிலும், ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச ஜனநாயக தினத்தை ஒட்டியதாகவும் “பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள ஜனநாயகத்திற்கு சட்டவாக்தக்தின் பங்கு“ எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

“இலங்கைப் நாடாளுமன்றம் ஆசியாவில் வயது வந்தவர்கள் வாக்களிப்பதற்கான உரிமையின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட மிகவும் பழமையான நாடாளுமன்றமாகும்.

அதேநேரம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற வகையில் இந்தியாவின் சட்டப்பேரவை பல்வேறு மத, பல்லின சமூகத்தில் எவ்வாறு செயற்படுகின்றது என்பது அயல்நாடான எமக்கு மாத்திரமன்றி ஜனநாயக ஆட்சியின் விற்பனர்களுக்கும் மதிப்புமிக்க பாடங்களை வழங்குகிறது” எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தின் போது இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தியது எனவும் சபாநாயகர் நினைவு கூர்ந்திருந்தார்.

அதுநேரம் புதிதாக உருவாக்கப்பட்ட தொடர்பாடல் திணைக்களத்தின் ஊடாக பொதுமக்களைச் சென்றடைவதற்கு நாடாளுமன்றம் அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்ற செயற்பாடுகள் பற்றிய அறிவை வளர்ப்பதற்கும், ஜனநாயகத்தை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும் குறிப்பாக ஜனநாயகத்தின் கொடியை ஏந்தக்கூடிய எதிர்கால சந்ததியினரான பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு இவற்றை விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளோம் ” என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் “தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் குழுக்களின் செயற்பாடுகளை அறிக்கையிட ஊடகங்களுக்கு அனுமதி வழங்க இலங்கை நாடாளுமன்றம் தீர்மானித்ததுடன், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலுக்கு வழிவகுக்கக் கூடிய வகையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பலப்படுத்தும் முறையை நோக்கிய நடவடிக்கையாக இது அமைந்துள்ளது” எனவும் சபாநாயகர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் “சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் கீழ் வரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கக்கூடிய துடிப்பான குழு முறைமையையும் இலங்கைப் நாடாளுமன்றம் கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கொரோனா சவால்களுக்கு மத்தியில் சுகாதாரப் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கவனத்தில் கொண்டு நாடாளுமன்ற அமர்வு நாள்கள் குறைக்கப்பட்டாலும் வளமையான நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நாடாளுமன்ற வளாகத்தில் வாராந்தம் எழுமாறான கொவிட் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம் - நாடாளுமன்ற தொடர்பாடல...
மின்சார தடையை ஏற்படுத்த வேண்டாம் - மின்தடை தொடர்பில் துறைசார் தரப்பினருக்கு ஜயாதிபதி ஆலோசனை!
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்ததால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும...