நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, November 4th, 2021

மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த அனைத்து வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக, ஒளி நிறைந்த வளர்ச்சிப் பாதை நோக்கி, பல தடைகளைத் தாண்டி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் நம் தேசம் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே எம் அனைவரினதும் பெருவிருப்பாகும்.

இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும் பணியோடு பல முன்னேற்றகரமானதும் ஆக்கபூர்வமானதுமான செயற்பாடுகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அனைவரதும் அபிலாசைகள் நிறைவேறி, இலங்கைத் திருநாடு சுபீட்சம் மிக்கதோர் தேசமாக மலரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும்.

தேசிய ஒற்றுமையைப் போற்ற இது ஒரு சிறந்த நாளாகும். சகல மதங்களிலும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்படுவதென்பது, எம்முள் இருக்கும் அறியாமை என்னும் இருள் அகன்று அகவொளி பிரகாசிக்க வேண்டும் என்பதற்கான குறியீடாகும். இந்நன்னாளில் ஏற்றப்படும் தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வுக்கான சமிக்ஞையாகவே எண்ணப்பட வேண்டியது.

அந்தவகையில் மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த அனைத்து வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ள பிரதமர் இந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை மாதாவின் பிள்ளைகளை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: