தெரிவுக்குழு முன்னிலையில் பொய்யான தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை!

Monday, June 24th, 2019

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் பொய்யான தகவல்களை வழங்கியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்களிற்கு எதிராக எவ்வாறான சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் தெரிவுக்குழு உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை பல முக்கிய நபர்கள் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர்.

இதன்போது சாட்சியம் அளித்த தௌஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசீக், தாம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக கூறியிருந்தார்.

எனினும் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் காணொளியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவர், பொய் உரைக்கமாட்டேன் என உறுதிமொழி வழங்கிய பின்னரே அனைத்து சாட்சியாளர்களும் தெரிவுக்குழுவில் சாட்சியமளித்துள்ளதாக கூறியுள்ளார்.

அவ்வாறு உறுதிமொழியை மீறி பொய்யான தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: