தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்தாளமுக்கம் – கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Friday, May 15th, 2020

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது. இந்நிலையில் கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் குறித்த தாக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் அப்பிரதேசத்திலேயே மேலும் குறைந்த அழுத்தத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அது தெற்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் சுழல் சூறாவளியாக மாறும் வாய்ப்பு காணப்படுவதோடு, நாளை மறுதினம் (17) வரை வட மேல் திசையிலும் அதன் பின்னர் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வடகிழக்கு வங்களா விரிகுடா பிரதேசத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள ஆழ் கடல் மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் கடும் மழை அல்லது இடியுடன் மழை ஏற்படலாம் என்பதோடு, காற்றின் வேகம் உடனடியாக மணிக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என்பதால், கடலின் அலை திடீரென கொந்தளிக்கும் வாய்ப்பு அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரையை அண்டிய பகுதிகளில் கடல் அலையின் உயரம் 2 – 2.5 மீற்றர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதோடு, இதன் காரணமாக, அலைகள் கரையை நோக்கி அதிக தூரம் வர வாய்ப்பு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: