தபால் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை கொடுப்பது சாத்தியமற்றது – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Tuesday, December 13th, 2022

நாட்டின் பொருளாதார மந்த நிலையில் தபால் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை கொடுப்பது சாத்தியமற்றது என சுட்டிக்காட்டியுள்ள வெகுஜன ஊடகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன விடயதானத்துக்குப் பொறுப்பான  அமைச்சரவை அமைச்சரென்ற ரீதியில் அரசாங்கத்தின் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு நடைமுறைகளுக்கு எதிராக செயற்படும் திறன் தனக்கு இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

தபால் திணைக்கள ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்த போதிலும், பொருளாதாரம் மந்தமாக இருக்கும் இத் தருணத்தில் மேலதிக நேர கொடுப்பனவுகளை அதிகரிப்பது முற்றிலும் சாத்தியமற்றதென்றும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

தபால் திணைக்களம் சட்ட விரோத வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்

அரச துறையில் சம்பளம், மேலதிக நேர கொடுப்பனவுகள், ஓய்வூதியம் என்பன இப்போது நாட்டுக்கு தாங்க முடியாத செலவை சுமத்தியுள்ளதாகவும், தற்போது அரச கடன் மற்றும் அரச ஊழியர்களின் சம்பளம், மேலதிக நேரம் மற்றும் ஓய்வூதியம் என்பனவற்றை செலுத்திய பின்னர், அரசை கொண்டு நடத்த போதுமான பணம் மிச்சம் இருக்காதென்றும் அமைச்சர் கூறினார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக 1,002 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள் காரணமாக இவ்வருடம் அரச சம்பள அதிகரிப்பு ஏற்படாதென இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், வரி மூலம் பெறப்படும் வருமானம் மக்கள் மீது அதிக அழுத்தத்தையும் கொடுத்துள்ளது.

தபால் திணைக்களத்தின் வருமானத்தை விட சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக அரசாங்கம் செலவிடுவதாகவும், வருடாந்தம் சுமார் 05 பில்லியன் ரூபா பொதுமக்களின் வரிப்பணத்தை தபால் திணைக்களத்துக்கு வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அதிக பணம் செலவழிக்க சாத்தியமில்லையெனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: