தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும் – தரவு பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, February 14th, 2024

தனிப்பட்ட தரவு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களால் தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும் என தரவு பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்துள்ளார்

இதன் ஊடாக தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு, டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கான வசதிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொழில்நுட்ப விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்குள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பகுதி V ஜூலை 2023 முதல் நடைமுறைக்கு வருவதோடு அதிகாரசபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் சபையை நியமிக்க ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அதற்கமைய ஒக்டோபர் 2023 இல், இந்த அதிகாரசபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டது.

பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகளை தயாரிக்கும் பணியில் தொடர்புபட்டுள்ள அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை ஒழுங்குபடுத்தும் ஒரு நிறுவனமாக இந்த அதிகாரசபை செயல்படுகிறது. மேலும், தரவு பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கான வசதிகளை வழங்கவும் அதிகாரசபை எதிர்பார்க்கிறது.

இந்த புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 2025 மார்ச் 18 ஆம் திகதி முதல் தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும். மேலும், ‘தேவையற்ற செய்திகளைப் பரப்புவதற்கான தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துதல்’ தொடர்பில் இந்தச் சட்டத்தின் பகுதி IV நடைமுறைக்கு வரும் திகதி, சபாநாயகரின் சான்றுப்படுத்தும் திகதியிலிருந்து 24 மாதங்களுக்குக் குறையாத மற்றும் 48 மாதங்களுக்கு உட்பட்ட திகதியாக இருக்க வேண்டும். எனவே 2025 மார்ச் 25ஆம் திகதிக்குப் பின்னர் இது நடைமுறைக்கு வரும்.

இந்தச் சட்டத்தின் VI,VIII,IX மற்றும் X ஆகிய பகுதிகளை 01 டிசம்பர் 2023 முதல் நடைமுறைப்படுத்துவதன் மூலம், அதிகாரசபைக்கு தேவையான நிதி வசதிகள் கிடைப்பதோடு, சட்டத்தின் 52ஆவது பிரிவின் கீழ் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அதிகாரசபையின் பணியாளர் குழுவிற்கு ஆட்சேர்ப்பது தொடர்பான சட்டதிட்டங்களை வகுப்பதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்கவும் பணிப்பாளர் நாயகம் மற்றும் பணியாளர்களுக்குரிய அதிகாரங்களை வழங்கவும் ஏனைய நடவடிக்கைகள் ஊடாக அதிகாரசபையின் பணிகளை முழுமையாக செயற்பாட்டு நிலைக்கு கொண்டுவரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதான பணியாளர்களை திறந்த, வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மையின் மூலம் ஆட்சேர்ப்பு செய்து நியமனம் செய்வதற்கும், 2025 மார்ச் 18 ஆம் திகதிக்கு முன்னர் நிறுவன உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், முக்கிய தரப்பினர்களை தெளிவுபடுத்தும் பணியை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கும் இந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தனிப்பட்ட தரவு பாதுகாப்பு அதிகாரசபைக்கு வாய்ப்பு ஏற்படும்.

2024 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் தொடர்புள்ள தரப்பினர்களின் கருத்துக்களை பெற்று தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கை கட்டமைப்பு மற்றும் சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தயாரிக்கவும் 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மற்றும் 2025 இன் முதல் காலாண்டில் அந்தக் கொள்கைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தவும் தரவு பாதுகாப்பு அதிகாரசபை எதிர்பார்க்கிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: