ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக பார்வை குறைபாடுடைய மக்களுக்கு விசேட வாக்குச்சீட்டு – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!

Wednesday, July 24th, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, முதன்முறையாக பார்வை குறைபாடுடைய சமூகத்தினருக்காக விசேட வாக்குச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில், குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் அழைக்கப்பட்டபோது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அதற்கு முன்னதாக இன்று (24) நாளை (25) அந்த ஆணைக்குழு கூடி இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

குறித்த தீர்ப்பின்போது வழக்கு கட்டணமாக விதிக்கப்பட்ட 5 இலட்சம் ரூபாவை, அந்த வழக்கின் மனுதாரரான சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றத்துக்கு செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: