செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்தில் தீர்வு – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உறுதி!

Monday, August 31st, 2020

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்’வு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பக் குழுவின் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை உள்ளிட்ட நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

இதன்போது குறித்த இடத்திற்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மக்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரிவிப்பதுடன், எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் இந்த வைத்தியசாலையில் இருக்கின்ற அனேகமான பிரச்சினைகள் தீர்க்கப்படுமென உறுதியளித்தார். நாடாளுமன்ற உறுப்பினரின் உறுதிமொழியை அடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

முன்பதாக செட்டிகுளம் வைத்தியசாலையில் பல நிர்வாக குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவித்த மக்கள், குறிப்பாக வைத்தியர் பற்றாக்குறை காரணமாக நோயாளார் விடுதி மூடப்பட்டுள்ளதுடன், சிறிய நோய்களிற்காக சிகிச்சைக்கு சென்றாலும் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படும் நிலையே காணப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகுவதாகவும் கூலி தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதால், வவுனியா சென்று வருவதற்கு பொருளாதார ரீதியாக கஸ்டங்களை அனுபவித்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

குறித்த வைத்தியசாலையை நம்பி செட்டிக்குளம் பிரதேசம் மற்றும் அதனை அண்மித்த பல கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்ற நிலையில், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 12 வைத்தியர்களுக்கான நியமனம் (காடர்) இருக்கின்றபோதும் 2 வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

சத்திர சிகிச்சை நிபுணர், பல்வைத்தியர் போன்றோரும் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் மருத்துவ விடுதியையும் இயக்க முடியாமல் நோயாளர்களிற்கு சரியான சிகிச்சைகளை வழங்கமுடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், செட்டிகுளம் வைத்தியசாலையில் காணப்படுகின்ற நிர்வாக குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு வலியறுத்தியே இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மக்களுடன் கலந்துரையாடியதுடன் பிரச்சினைக்கு ஒருவாரத்தில் முடியுமானளவு தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: