சுபீட்சமான எதிர்காலத்திற்காக ஒன்றுபட்டு உழைப்போம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!
Sunday, February 19th, 2017கட்சியின் கொள்கையானது எமது உணர்வோடும், உழைப்போடும் ஒன்றாக கலந்துள்ள அதேவேளை, மக்கள் நலன்சார்ந்ததாக அமையவேண்டும். கடந்த காலங்களில் கரடு முரடான பாதையூடாகவும் உயிர்த் தியாகங்களினூடாகவும் மக்களுக்காக பபணியாற்றி வெற்றிகண்டுள்ளோம் என்பதை வடக்கின் ஒவ்வொரு பகுதியும் சாட்சிசொல்லும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும் ஶ்ரீமயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்துள்ளார்.
கட்சியின் வேலணை பிரதேச அலுவலகத்தில் இடம்பெற்ற பிரதேசத்தின் வட்டார செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
1987 க்கு பிற்பட்ட காலத்திலிருந்து நாம் எடுத்துக்கொண்ட நடைமுறை யதார்த்த வழிமுறையிலான ஜனநாயக அரசியல் பாதையை கண்டு அச்சமுற்ற இதர தமிழ் அரசியல் கட்சிகள் தமது அரசியல் சுயநலன்களுக்காக எமது இணக்க அரசியல் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் திரிபுபடுத்தி எம்மை தவறானவர்களாக சித்தரித்து மக்களது வாக்குகளை அபகரித்து தமது அரசியல் அதிகாரங்களை வலுப்படுத்திக்கொண்டதுடன் ஒட்டுண்ணிக்குழுவாக இருந்து மக்களது வாழ்வியலை உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருக்கின்றனர். இத்தகையவர்களது சுயநலன்களால் தான் எமது மக்கள் வடக்கில் மட்டுமல்லாது கிழக்கிலும் தமது வாழ்வுரிமையை இழந்ததுடன் பேரழிவையும் சந்தித்திரந்தனர்
நாம் முன்னெடுக்கும் நகர்வுகள் ஒவ்வொன்றும் எமது இனத்தின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டதாகவே உள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 ஆவது தீர்வுத்திட்டத்தை ழுமையான ஆரம்பமாக கொண்டு எமது உரிமைப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்றும். இதனை ஒரு ஆரம்பமாக கொண்டு செயற்படுத்தி அதனை வளர்த்தெடப்பதனூடாகவே நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என்பதை நாம் திடமாக நம்புகின்றோம்.
அதன் அடிப்படையிலேயே 13ஆவது திருத்தச்சட்டத்தை நாம் இன்றுவரை பாதுகாத்து வந்ததன் காரணமாகத்தான் இன்றைய சூழ்நிலையிலும் ஒரு யதார்த்தபூர்வமான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் அதனூடாக காணப்படுகின்றது ..
அன்று நாம் எடுத்துக்கொண்ட அரசியல் கொள்கையை தமது சுயநலன்களுக்காக தட்டிக்கழித்துவந்தவர்கள்கூட இன்று அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர். அதன் பிரகாரமாகவே நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைமை பதவியையும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவியையும் மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களின் இணைத்தலைமை பதவிகளையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறான உயர் பதவிகளை பெற்றுக்கொண்டவர்களால் எமது மக்களுக்கு கிடைக்கப்பெற்றுவரும் அபிவிருத்திகளின் அனுகூலங்களை பார்க்கும்போது வெறுமையாகவே காணப்படுகின்றது. எமது சாணக்கியமான இணக்க அரசியல் நகர்வுகளை இதர தமிழ் அமைப்புகளும் தமிழ் கட்சிகளும் அப்போது ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று எமது மக்கள் சந்தித்த வரலாறுகாணாத உயிரழிவுகளையும் பேரவலங்களையம் தடுத்து நிறுத்தியிருந்திருக்க முடிந்திருக்கும்.
கறைபடிந்த கடந்தகால வரலாற்று பதிவுகளினூடாக நாம் கற்றுக்கொண்ட பாடங்களை இனிவரும் காலத்தின் சுபீட்சமான வாழ்க்கைக்கான வரலாறுகளாக பதிவு செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கட்சியின் வேலணை பிரதேச உதவி நிர்வாக செயலாளர் ஞானமூர்த்தி (யசோ) தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கட்சியின் அலுவலக நிர்வாகச் செயலாளர் வசந்தன் அகியோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|