சுதந்திர தினத்தை கொண்டாடுவது அவசியம் – இல்லையெனில் சுதந்திரத்தை கூட நாம் கொண்டாட முடியாதவர்கள் என உலகம் சொல்லும் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!

Friday, January 27th, 2023

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தும் அதேவேளை சுதந்திர தின செயற்பாடுகளுக்கு தேவையான செலவினங்களை மதிப்பீடு செய்து நடைமுறையான முறையில் செலவு செய்து செலவுகளை குறைப்பது அரசியல் அதிகார சபையினது பொறுப்பாகும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான செலவினங்களை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

“நாம் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும், இல்லையெனில், நமது சுதந்திரத்தை கூட நாம் கொண்டாட முடியாது என உலகம் சொல்லும். அதேபோல் சுற்றுலாப் பயணிகளையும் முதலீட்டாளர்களையும் நம் நாட்டிற்கு ஈர்க்க வேண்டும். நம் நாட்டைப் பற்றிய நேர்மறையான பிம்பத்தை உருவாக்க வேண்டும். எனவே, நமது செலவினங்களைக் குறைத்து, நமது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவுடன் இணைந்து நகர்ப்புற காடுகளை உருவாக்கும் திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. துபாயில் நடைபெறும் காலநிலை உச்சி மாநாட்டில் (COP28) கலந்து கொள்வதற்கு முன்னதாகவே நடவடிக்கைகளைத் தொடங்க எதிர்பார்க்கிறோம். மேலும், பல புதிய நிறுவனங்களைத் தொடங்கவும் எதிர்பார்க்கிறோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தின விழாவை குறைந்த செலவை பேணுவது தொடர்பான முன் கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அதன்படி, 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பெப்ரவரி 2ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை பல சிறப்பு திட்டங்கள் செயற்படுத்தப்பட உள்ளன.

அத்துடன் விசேட தலதா பூஜை மற்றும் பீரித் ஓதுதல், அனைத்து மத சடங்குகள், சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் கலாசார நிகழ்ச்சிகள், காலி முகத்திடலில் நடைபெறும் பாரம்பரிய சுதந்திர விழா பிரதான நிகழ்வு, தேசிய பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சிசாலை ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்படும். யாழ்ப்பாணம் கலாசார நிலைய திறப்பு விழா, கண்டி குடியரசு அணிவகுப்பு, தொன்றா முனையிலிருந்து பருத்தித்துறை வரையிலான சைக்கிள் ஓட்டப் போட்டி போன்றவையும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: