சரியானதைச் செய்ய சட்டம் ஒருபோதும் தடையாக இருக்கப் போவதில்லை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Saturday, February 19th, 2022

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கே சட்டம் காணப்படுகின்றது என தெரிவித்துள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சரியானதைச் செய்ய சட்டம் ஒருபோதும் தடையாக இருப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபைக்கு இன்று திடீர் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, வலுசக்தி அதிகார சபையின் முகாமைத்துவம், ஆராய்ச்சி, மூலோபாயத் திட்டம், வலுசக்தி முகாமைத்துவம் போன்ற பிரிவுகளுக்குச் சென்று அவற்றின் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்திருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி –

நாட்டு மக்களுக்கு சரியானதைச் செய்தாலும் அதனைத் தடுப்பதற்கு பல்வேறு குழுக்கள் பல சதித்திட்டங்களை வகுப்பதாக விசனம் தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான சதி முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம் இலக்கு வைக்கப்பட்ட திட்டங்களைச் செயற்படுத்தும் போது, தேசிய தேவையை மாத்திரம் கவனத்திற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய ஜனாதிபதி, எதிர்காலத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தாமதமாவதால், உலகத்தின்முன் நமது நாடு பல வருடங்களுக்கான பின்னடைவைச் சந்திக்குமென்றும் எடுத்துரைத்தார்.

இதேவேளை வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், இந்நாட்டின் மின்சாரத் துறையில் காணப்படும் தடைகளைத் தகர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும், இதனால் ஒரு இலட்சம் வீட்டுக் கூரைகள் மீது சூரியசக்திப் படலங்களைப் பொருத்தும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்தி, அதன் பயனைக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறும், இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

அதேபோன்று, நாட்டுக்குள் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு, மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுப் பயன்பாட்டின் மூலம் குறுகிய காலத்துக்குள் தீர்வு காண்பதற்குள்ள இயலுமை தொடர்பிலும் இதன்போது ஆராய்ந்த ஜனாதிபதி ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காகவே சட்டம் காணப்படுகின்றது என்று சுட்டிக்காட்டியதுடன் சரியானதைச் செய்ய சட்டம் ஒருபோதும் தடையாக இருக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: