சமூக சகவாழ்வின் மகிமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சமய விழாவாக ஹஜ் பெருநாள் அமைகின்றது – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021

சமூக சகவாழ்வின் மகிமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சமய விழாவாக ஹஜ் பெருநாள் அமைகின்றது என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச  கொவிட்- 19 நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு போன்றே இம்முறையும் வழமை போன்று மக்காவுக்கான யாத்திரை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதிக்கும் ஹஜ் பிரார்த்தனைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என்பது தனது நம்பிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மக்களின் பெருநாளான ஹஜ் பெருநாளை தினம் குறித்து விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

‘ஹஜ்’புனிதப் பயணத்தின் ஊடாக உலகம் முழுவதும் பரந்து வாழும் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே குறிக்கோளுடன் மனிதர்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் களைந்து இறைவனின் முன்னிலையில் அனைவரும் சமமாக ஒற்றுமையாக பிரார்த்திக்கின்றனர்.

அந்தவகையில் இன்றைய காலச் சூழ்நிலையை கருத்திற்கொண்டு பள்ளிவாசல்களில் ஒன்றுகூடி மத வழிபாடுகளில் ஈடுபட வேண்டாம் என்ற சுகாதார துறையினரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப கொவிட்-19 தொற்றுநோயை முற்றாக ஒழித்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இஸ்லாமிய வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றி உலக மக்கள் அனைவரும் கொவிட் தொற்றிலிருந்து குறுகிய காலத்திற்குள் விடுப்பட வேண்டும் என இன்றைய இந்த மகத்தான நாளில் நாங்கள் அல்லாஹ்வை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ள பிரதமர் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் தனது மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: