கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை!

Sunday, April 12th, 2020

யாழ்ப்பாணத்தில் தற்போது எந்த ஒரு கொரோனா நோயாளிகளும் இனம் காணப்படாத நிலையில் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 7 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் முதலாவதாக இனங்காணப்பட்ட தாவடியை சேர்ந்த நோயாளி தற்போது உடல் நலம் தேறி வந்துள்ளதுடன் அவர் மிக விரைவில் வீடு திரும்ப உள்ளார் என்று கூறப்படுகின்றன. மிகுதி நோயாளிகளினது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.

மேலும் கடந்த சில நாட்களாக எமது மாவட்டத்தில் எந்த ஒரு கொரோனா நோயாளிகள் இனம் காணப்படவில்லை. இது நமக்கு ஒரு ஆரோக்கியமான விடயம். யாழ்ப்பாணத்தில் தற்போது இருக்கின்ற சூழ்நிலையை போல இன்னும் சில தினங்களுக்கு இருக்குமாயின் மத்திய சுகாதார அமைச்சும் இலங்கை அரசாங்கமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தில் தளர்வுகள் ஏற்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது என்று நம்புகின்றேன்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியும் சங்கானை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 10 பேருக்கும் இறுதியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவர்களில் எவருக்கும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதேவேளை, கடந்த சில நாட்களாக தொற்று உள்ளவர்கள் எவரும் இனம் காணப்படவில்லை.

தற்போது இருக்கின்ற நிலைமை இன்னும் சில நாட்களுக்கு தொடருமானால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த சாத்தியங்கள் இருப்பதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts: