குவைத் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் – அமைச்சர் மனுஷ நாணயக்கா அழைப்பு!

Wednesday, February 28th, 2024

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை பயன்படுத்தி குவைத் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டுமென தான் அழைப்பு விடுப்பதாகவும் குவைத்தில் பணிபுரியும் 100,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு குவைத் இரண்டாவது தாயகமாகவுள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்..

இலங்கை, குவைத் அரசாங்கத்திற்கிடையில் 2009 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு உடன்படிக்கையானது பல வசதிகளை வழங்குகிறது. இதனால் குவைத் நாட்டின் முதலீட்டாளர்கள் அதிகபட்ச பலனைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள குவைத் தூதரக ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் (26) நடைபெற்ற குவைத்தின் தேசிய தின நிகழ்வின் போது அமைச்சரால் இந்த விசேட அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சர் அலிசப்ரி உட்பட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் –

“இலங்கை-குவைத்துக்குமிடையிலான இராஜதந்திர உறவு ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை இவ்விரு அரசுகளும் பரஸ்பர நெருக்கமான உறவுகளை பேணி வருகின்றன.

அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் மூலம் சலுகைக் கடன்களை எமது நாட்டிற்கு வழங்கி, இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு குவைத் அரசாங்கம் வழங்கிய ஆதரவானது இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுத்துள்ளதை இங்கு குறிப்பாக நினைவுகூரப்பட வேண்டும்.

குவைத்தில் பணிபுரியும் 100,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு குவைத் இரண்டாவது தாயகமாகவுள்ளது, இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள குவைத் அரசாங்கத்திற்கு எனது நன்றியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

குவைத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக நிபுணர்களை வழங்குவதன் மூலம் குவைத்தின் வளர்ச்சிக்கு பங்காளியாக இருக்க விரும்புகிறோம்.

மேலும் 2020 பெப்ரவரி மாதம் இலங்கை வர்த்தக சம்மேளனத்திற்கும் குவைத் வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இருநாட்டு வர்த்தகப் பிரதிநிதிகள் மேம்படுத்துவதற்காக வருகை தந்தால், அது பெரும் சாதகமான முடிவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் எனவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


பயணிகளை ஏற்றிச் செல்லும் மீன்பிடிப் படகுகளின் அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் -அமைச்சர் மக...
ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 867 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் - அமைச்சரவை அங்க...
கடந்த 10 மாதங்களில் இலங்கையில் 168 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு - நாடாளுமன்ற உறுப்பினர் எரான்...