குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு – லேடி ரிட்ஜ்வே குழந்தை நல மருத்துவ வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Wednesday, April 17th, 2024

சம காலங்களில் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுகின்ற நிலையில் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

நீட்டிக்கப்பட்ட விடுமுறை நாட்களை தொடர்ந்து குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு அதிகம் பரவி வருவதாக குறிப்பிடப்படுகிறது.

அடிக்கடி தண்ணீருடன் மலம் வெளியேறுதல், வயிற்று வலி அல்லது பிடிப்புகள், பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக காணப்படுகின்றன.

குறித்த அறிகுறிகள் காணப்பட்டால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது அதிக விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதற்கிடையில், குழந்தைகள் மத்தியில் டைபாய்டு காய்ச்சல்  பரவுவது குறித்து குழந்தை மருத்துவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், வயிற்றுப்போக்கு நோய் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு (WHO) குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: