குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னிலையில் ஆயரானார் அரியநேத்திரன்!

Tuesday, June 28th, 2016

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் நேற்று(27) குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற அரசியல் படுகொலை சம்பவமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸிலி இராசநாயகம் படுகொலை தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தெரிவுசெய்யப்படவில்லை. விருப்பு வாக்கு அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கிங்ஸிலி இராசநாயகம் தேர்வான போதிலும், அவர் பதவிப் பிரமாணம் செய்யாமலே ஒரு சில நாட்களில் பதவியை இராஜினாமா செய்தார்.

விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் இராஜினாமா செய்து கொண்டதாக அப்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அந்த வெற்றிடத்திற்கு விருப்பு வாக்குகள் அடிப்படையில் அடுத்த இடத்திருந்த பா.அரியநேத்திரன் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கிங்ஸ்லி இராசநாயகம் பதவியை இராஜினாமா செய்த ஆறு மாதங்களுக்கு பிறகு, அக்டோபர் 19ஆம் திகதியன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியிலுள்ள அவரது காணியை பார்வையிட சென்றிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் தான் பொறுப்பு என ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2004ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் கிங்சிலி இராசநாயகம், தமிழர் புனர்வாழ்வு கழகத்திலும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் 2004ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவின் பின்னர், இவர் கொண்டிருந்த நிலைப்பாடு காரணமாக அந்த அமைப்பினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Related posts: