காலம் தாழ்த்திய மதகு புனரமைப்பால் மக்களுக்கு அசௌகரியம் – உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆறுகால் மட மக்கள் கவனயிர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் 10 வட்டாரம் 5 ஆம் ஒழுங்கை பகுதி மக்கள் தமது பகுதிக்கான மதகு புனரமைப்பு நடவடிக்கைக்காக ஆழப்படுத்தப்பட்ட பகுதியில் நீர் தேங்கி நிற்பதால் தமது போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் இதற்கு உடனடிக் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என கோரியும் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட மக்கள் தெரிவிக்கையில் –
எமது பகுதியானது மிகவும் தாழ்நிலப்பகுதியாக காணப்படுகின்ற நிலையில் மழை காலத்தில் ஏற்படும் அவலநிலையை கருத்தில் கொண்டு குறித்த மதகை புனரமைத்து தருமாறு பலதரப்பினரிடமும் கோரியிருந்த நிலையில் தற்போது யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால் சப்ரிகம திட்டத்தின் கிழ் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளது. இக்காலப்பகுதியில் அதாவது காலம் தாழ்த்தி குறித்த புனரமைப்பு நடைபெறுவதால் அப்புனமைப்புக்காக வெட்டப்பட்ட பாரிய குழிகளுக்குள் சுமார் 5 அடிவரையான நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் எமது பகுதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் சிறுவர்களும் முதியவர்களும் பெரும் சுகாதாரப் பாதிப்புக்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பின் பெருக்கமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் எமது பகுதியின் அவசர சுகாதார தேவை கருதி இந்த புனரமைப்பை துரிதப்படுத்தி தேங்கியுள்ள நீரை வெளியேற்றி எமது பகுதியின் இயல்பு நிலையை ஏற்படுத்தி தருமாறு கோரியுள்ளனர்.
இதனிடையே குறித்த பகுதியில் அமைந்துள்ள “கள்” விற்பனை நிலையம் ஒன்றின் பாதிப்பு தொடர்பாகவும் குறித்த ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|