காணாமல்போன தொண்டர் ஆசிரியை எச்சங்களாக மீட்பு !
 Friday, February 17th, 2017
        
                    Friday, February 17th, 2017
            
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர் ஒருவர் காணாமல் போன நிலையில், ஒன்றரை மாதங்களின் பின்னர் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கீரிச்சுட்டான் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மடு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா பாண்டியன் குளம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான தொண்டர் ஆசிரியரான ஏ.ஜாலினி (வயது-31) என தெரிய வந்துள்ளது.
குறித்த தொண்டர் ஆசிரியரது மரணம் தொடர்பில் மன்னாரில் புள்ளி விபரவியல் திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சடலம் மீட்கப்பட்டுள்ள இடத்திற்கு நேற்று மாலை சென்ற மன்னார் மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டுள்ளதோடு, மீட்கப்பட்ட சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆசிரியர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அளவில் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில், அவரது சடலம் ஆடைகள் மற்றும் தடயங்கள் மூலம் அவரது உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓமந்தைப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கோள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பாக மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்பை ஏற்படுத்திய போதும் குறித்த நபரின் கைதினை அவர் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        