கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விநியோகிக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Friday, September 3rd, 2021

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விநியோகிக்க, சீனி இறக்குமதியாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக, கூட்டுறவு சேவைகள், விற்பனை மேம்பாட்டு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இணக்கப்பாட்டுக்கு அமைவான கடிதத்தை இன்றையதினம் வர்த்தக அமைச்சிடம் கையளிக்க அவர்கள் இணங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரிசி மற்றும் சீனிக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் நேற்றுமுதல் அமுலாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஆகக் கூடுதலான சில்லறை விலைகளுக்கு மேலாக இறக்குமதியாளர், வழங்குநர், உற்பத்தியாளர், விநியோகத்தர் அல்லது வியாபாரி எவரும் அரிசி மற்றும் சீனியை விற்பனை செய்யவோ, வழங்கவோ, விற்பனைக்கு விடவோ அல்லது விற்பனைக்கு வெளிப்படுத்தவோ முடியாது என கட்டளையிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சீனி விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை 128 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சிவப்பு சீனியின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரிசிக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதன்படி, கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளை அல்லது சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் விற்பனை விலை 103 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சிவப்பு நாடு கிலோ ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை 98 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது பச்சை அரிசி கிலோ ஒன்றின் அதிகூடிய விலை 95 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: