கடற்றொழில் அமைச்சினால் புதிய சட்ட திருத்தங்கள் அறிமுகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவிப்பு!

Wednesday, November 1st, 2023

கடற்றொழில் அமைச்சினால் புதிய சட்ட திருத்தங்கள் அறிமுகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுதொடர்பான முன்மொழிவுகள் உள்ளங்கிய மாதிரி வரைபு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் அல்லது புதிய சடடங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சருடனும் கதைத்திருக்கின்றோம் என – யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சம்மேளனம் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது வெளியாகியுள்ள முன்வரைபை படித்து எங்களுடைய கருத்துக்களை முன்வைக்குமாறு கேட்டு்ள்ளார். எங்களுடைய கருத்துக்கள் மாத்திரமல்ல, நாடாளாவிய ரீதியில் இருகின்ற கடற்றொழில் சார்ந்த தரப்புகள் அனைத்தினதும் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்  முன்வைக்கப்படுகின்ற அனைத்து முன்மொழிவுகளும்  பிரஸ்தாபிக்கப்பட்டு நியாயமான விடயங்களில் திருத்தங்களை மேற்கொண்ட பின்னர்,  அமைச்சரவையின் அனுமதி பெறப்பட வேண்டும்.

அதன்பின்னர் சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி அவர்களின் அனுமதிகளையும் பெற்ற பின்னர், சட்டவாக்கல் சபையான நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஆகவே கடற்றொழில் சட்டத் திருத்தங்கள் தொர்பாக,  ஒரு பொறுப்புள்ள அமைப்பு என்ற ரீதியில்  தற்போது கருத்து கூறுவது ஆரோக்கியம் அல்ல. அவ்வாறு கூறுவது மக்களை குழப்புகின்ற செயலாக மாறிவிடும்.

இதனிடையே கடற்றொழில் அமைச்சரை சந்தித்து பேசியிருகின்றோம். காலத்திற்கு  காலம் கொண்டு வரப்பட்ட கடற்றொழில் சார்ந்த சட்டங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் நோக்கில், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள தொடர்பான தண்டங்களை அதிகரித்து, சட்டவிரோத தொழில் முறைகள் பயன்படுத்தப்படுவதை முழுமையாக  கட்டுப்படுத்துவதன் மூலம் கடற்றொழிலாளர்களின் நிலைபேறான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தல் மற்றும் வருமானத்தை அதிகரித்து சிறந்த வாழ்கை தரத்தினை கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதையும் நோக்கமாக கொண்டே இந்தச் புதிய சட்டத் திருத்தங்கள் அறிமுகப்படுத்துவதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துளாளார்.

இதேநேரம் இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். வெளிநாட்டு படகுகளுக்கு மீன் பிடி அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடு வரவுள்ள புதிய சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதுதொடர்பாக ஆராய்ந்து பார்த்திருந்தோம். உண்மையிலேயே, குறித்த சட்ட ஏற்பாடு 1979 ஆம் ஆண்டிலிருந்து சட்டமாக இருகின்றது.

அதாவது, இலங்கையிலிருந்து 200 மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற ஆழ் கடல் பகுதியில் மீன்பிடிக்க விரும்புகின்ற வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் அனுமதியைப் பெற்று, எமது கொடியுடன் சென்று மீன்பிடிக்க முடியும். பின்னர் இலங்கையில் உள்ள அனுமதிக்கப்பட்ட துறைமுகம் ஒன்றிற்கு மீன்களை கொண்டு வந்து பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு மீன்களை அனுப்புவதற்கு அனுமதி  வழங்கும் வகையில் குறித்த சட்ட ஏற்பாடு அமைந்துள்ளது.

அவ்வாறு பிடிக்கப்படுகின்ற மீன்களை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்ய முடியாது. எனவே குறித்த சட்டத்தின் ஊடாக எமது நாட்டிற்கும் வருமானமும் வேலைவாய்ப்பும்  அதிகரிக்குமே தவிர, பாதிப்பு என்று சொல்ல முடியாது.

குறிப்பாக, இந்தச் சட்டத்திற்கும், இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத தொழில் செயற்பாடுகளுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்பதையும், அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் வேறாக இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளோம். அத்துடன் நடைமுறையில் உள்ள இந்திய றோலர்களுக்கான எதிரான சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சரை வலியுறுத்தியுள்ளோம்.

அந்தவகையில் புதிதாக வரவுள்ள சட்டத் திருத்தச் செயற்பாடுகளை தொடர்ந்தும் நாம் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். அவற்றில் எமது சமூகத்திற்கு பாதகமான விடயங்கள் உள்ளடக்கப்படுமாயின் நிச்சயமாக அவற்றை சுட்டிக் காட்டுவதுடன், தேவையேற்படின் எமது கருத்துக்களையும் வெளியிடுவதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இந்திய மத்திய அமைச்சரை சந்தித்து அவருக்கு நாங்கள் எதிர்நோக்கும் அவலங்களை தொடர்பில் விளக்கமளிக்க உள்ளதாக யாழ்ப்பாண கிராமிய கடற்தொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்,

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு நாளைமறுதினம் வருகை தரவுள்ள இந்திய மத்திய நிதி அமைச்சரை சந்தித்து இந்திய மீனவர்களினால் எமது வளங்கள் அழிக்கப்படுபவை தொடர்பில் அமைச்சருக்கு விரிவாக விளக்கமளிக்கவுள்ளதோடு எதிர்வரும் காலங்களில் தமிழகத்திற்கு சென்று தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக மீனவர்ளுக்கு எங்களுடைய அவலங்களை எடுத்துரைக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: