கடற்படையினரின் காவலில் இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்!

Saturday, December 19th, 2020

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் கைது தொடர்பான அறிக்கை ஊர்காவற்றுறை நீதவான் ஏ.ஜூட்சனிடம் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, இந்திய மீனவர்கள் 22 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை காரைநகர் கடற்படைத் தளத்தில் COVID-19 தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய, தனிமைப்படுத்தி தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில், நீதவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 22 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை காரைநகர் கடற்படை முகாமில் கடற்படையினரின் காவலில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். PCR பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது, கடந்த 14 ஆம் திகதி இந்திய மீனவர்கள் 22 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் மீன்பிடி படகுகள் ஐந்தும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: