கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் – மத்திய வங்கி நம்பிக்கை!

Wednesday, March 22nd, 2023

சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர்சபையின் அனுமதியை அடுத்து 7 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிட்டியிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கி, வெகுவிரைவில் நாட்டின் பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் 48 மாதகாலத்தில் சுமார் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்டது.

அதனையடுத்து கடந்த 6 மாதகாலமாக சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அதன் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்ட ஆவணம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (20) நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை ஆராய்ந்த பணிப்பாளர் சபை, எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர்களை சுமார் 3 பில்லியன் டொலர் வழங்குவதற்கு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர்சபையின் அனுமதியை அடுத்து 7 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிட்டியிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள 2.286 பில்லியன் டொலர் நிதிக்கு மேலதிகமாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களிடமிருந்து கிடைக்கப்பெறவுள்ள நிதியையும் சேர்த்து சுமார் 7 பில்லியன் டொலர்கள் கிடைக்குமென மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது.

அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையின் பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுமெனவும் மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

மேலும் தற்போது மனிதவள மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் முதலீடு செய்வதொன்றே தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து நிரந்தரமாக மீள்வதற்கும், நீண்டகால பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்வதற்குமான வழிமுறையாகும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: