ஒரு லீற்றர் டீசல் 12 ரூபா நட்டத்திலே விற்பனை செய்யப்படுகின்றது – நாடாளுமன்றில் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022

ஒரு லீற்றர் டீசல் 12 ரூபா நட்டத்திலேயே தற்போது விற்பனை செய்யப்படுவதாக எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேயின் வினாவுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலையில் மாற்றங்களை கொண்டுவருவதாக, அமைச்சர் கஞ்சன விஜயசேக்கர முன்னதாக அறிவித்திருந்தார்.

எனினும், விலைசூத்திரத்துக்கேற்ப எரிபொருள் விலையில் மாற்றங்களைச் செய்யாதமை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகுமென ஹேஷா விதானகே தெரிவிக்கின்றார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில், விலைசூத்திரத்திரத்தை பயன்படுத்தி விலை அதிகரிக்கப்படுகின்றது. குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில் ஏன் மக்களுக்கு எரிபொருளை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்க முடியாதெனவும் ஹேஷா விதானகே வினவினார்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க டி.வி சானக்க, டீசல் ஒரு லீற்றர் 12 ரூபா நட்டத்திலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 22 ரூபா நட்டத்திலும் விற்பனை செய்யப்படுகின்றது.

உலக சந்தையில் கடந்த வாரம் எரிபொருளுக்கான விலை குறையாமல், அதிகரித்திருந்ததை ஹேஷா வித்தானகே புரிந்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: