ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரசெனிகா கொவிட் தடுப்பூசிகளை இங்கிலாந்தின் பிரதான நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம் !

Monday, March 1st, 2021

இந்தியாவில் இருந்து இதுவரை காலமாக பெற்றுக்கொண்ட ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 தடுப்பூசிகளை இனிமேல் இங்கிலாந்தின் பிரதான நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் ஒளடத உற்பத்திகள், விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொதுமக்களுக்கு பயன்படுத்த வெளிநாடுகளில் இருந்து கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் குறித்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும கூறுகையில் –

தற்போதுவரையில் நான்கு இலட்சம் தடுப்பூசிகள் மக்களுக்க ஏற்றப்பட்டுள்ளன. அடுத்த கட்டத்தில் மேலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேநேரம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. விரைவில் அவற்றை நாட்டுக்கு கொண்டுவருவோம். சீனாவின் இரண்டு தடுப்பூசிகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.

ஆனால் தற்போதுவரையில் சீனா எமக்கு கொடுத்துள்ள பரிசோதனை மாதிரிகள் போதுமானதாக இல்லை. எனவே அது குறித்தும் சீனாவுடன் தொடர்ச்சியாக பேசி வருகின்றோம்.

இந்நிலையில் இறுதியாக கூடிய அமைச்சரவை கூட்டத்தில் மூன்று அமைச்சரவை பத்திரங்களை நான் முன்வைத்துள்ளேன்.

அதில் பிரதான ஒன்றாக இந்தியாவில் இருந்து ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாது நேரடியாக பிரதான நிறுவனத்திடம் இருந்தே ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யும் அமைச்சரவை பத்திரமாகும் என தெரிவித்த அமைச்சர் அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் ஆரம்பத்தில் நாம் ஒப்பந்தமொன்றை செய்து 18 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தபோதும் அவர்களால் 10 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க முடியும் என அறிவித்திருந்தனர்.

எனவே ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் வேறு நிறுவனங்களுடன் இது குறித்து நாம் கலந்துரையாடியிருந்தோம் ஆனால் எமக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள பிரதான நிறுவனத்திடம் இது தொடர்பில் கலந்துரையாடி பார்த்தோம். அவர்கள் எமக்கு கேட்கும் தொகையை தருவதாக கூறினர். எனவே இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் நிறுவனத்தில் இருந்தே பெற்றுக்கொள்ள தீர்மானம் எடுத்தோம் என தெரிவித்துள்ள அமைச்சர் இனிமேல் நாம் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை பிரித்தானியாவில் இருந்தே பெற்றுக்கொள்ளவுள்ளோம். எதிர்காலத்தில் ஏதேனும் நெருக்கடிகள் ஏற்பட்டால் மீண்டும் இந்தியாவிடம் பேசிப்பார்க்க முடியும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: