ஏப்ரல் 30 ஆம் திகதிமுதல் பொது இடங்களில் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அவசியம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, March 6th, 2022

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கொவிட்-19 செயலூக்கியை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மீண்டும் பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.

அத்துடன் கொவிட்-19 மரணங்களுக்கு அரசாங்கத்தினூடாக வழங்கப்பட்ட போக்குவரத்து செயற்பாடுகள் கைவிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிமுதல் பொது இடங்களில் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும்.

இதன்காரணமாக அதற்கு முன்னர் செயலூக்கி தடுப்பூசியை பெற்று முழுமையான தடுப்பூசியை பெற்ற அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய நாளில் 30 ஆயிரத்து 381 பேருக்கு, பைஃஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 73 இலட்சத்து 6, 152ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், நேற்றையதினம் 2, 593 பேருக்கு பைஃஸர் முதலாம் தடுப்பூசியும், 6,281 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 786 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 2,071 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகத் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: