எல்லைதாண்டி ஊடுருவிய இந்திய மீனவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவு!

Wednesday, December 16th, 2020

இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய இந்திய மீனவர்களில் 22 பேரையும் எதிர் வரும் 18 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் அ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் ஊடுருவிய இந்திய மீனவர்களில் 22 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தற்போது கடற்படை முகாமில் தனியான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள்களை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்தின் கீழ் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் அதிகாரம் மாவட்ட நீரியல்வளத்துறைத் திணைக்களத்திற்கு உரியது.

இதனால் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களையும் பொறுப்பேற்குமாறு கடற்படை மாவட்ட நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த மாவட்ட நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினர் தம்மிடம் கொரோனா தொற்றிற்குரிய போதிய பாதுகாப்பு தடுப்பு பொறிமுறை உடனடியாக இல்லாத காரணத்தினால் வெளிநாட்டு கைதிகளை பொறுப்பேற்க முடியாது என  தெரிவித்துள்ளது.

மாவட்ட நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினரின் குறித்த நிலை காரணமாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை கடற்படை முகாமில் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்திய பின்பு நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள 22 இந்திய மீனவர்கள் தொடர்பிலும் அவர்களின் 3 படகுகள் தொடர்பாகவும் மாவட்ட நீரியல்வளத் திணைக்களம் ஊடாக நேற்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: