எரிபொருள் நிரப்பு நிலைய கைக்கலப்பில் காயமடைந்த இளைஞன் பலி – தீவிர விசாரணையில் பொலிசார்!

Friday, June 24th, 2022

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கைக்கலப்பில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உடுவில் செப்பாலை கோவிலடியைச் சேர்ந்த 23 வயதுடைய செல்வரத்தினம் பிரசாந் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்த இளைஞனும், அவரது நண்பரும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து இருவரும் அவற்றை தமது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த போது, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்தவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

முரண்பாடு முற்றிய நிலையில் இரு இளைஞர்கள் மீதும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இருவரும் காயமடைந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை தாக்குதலாளிகளிடம் இருந்து காப்பாற்றி அனுப்பி வைத்திருந்தனர்.

மறுநாள் திங்கட்கிழமை தாக்குதலுக்கு இலக்கான இளைஞர்களில் ஒருவர் நெஞ்சு வலி என யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் அவரை விடுதியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை குறித்த எரிபொருள் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே இளைஞனின் உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் சுட்டிக்காட்டிவரும் நிலையில் குறித்த மரணம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: