எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் கடனுதவி கோரும் இலங்கை – கலந்துரையாடல்கள் தீவிரமாக இடம்பெறுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, September 18th, 2022

ரஷ்ய நாட்டு எரிபொருளை இலங்கைக்கு கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் கடனுதவிகளை பெறுவதற்கு இலங்கை மற்றும் ரஷ்ய நாட்டு அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ கடந்த நாட்களில் ஏற்பட்ட நெருக்கடிகளை நாங்கள் எதிர்கொண்டதால் தற்போதுள்ள நெருக்கடிகளையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்.

எவ்வாறாயினும் பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியில் இருந்து தற்போது நாங்கள் மெதுவாக மீண்டு வருகின்றோம்.

பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கு ரஷ்யாவிடம் இருந்து மிகப் பெரிய ஆதரவை பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம். இது குறித்த கலந்துரையாடல்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கும், நாட்டிலுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் இலங்கைக்கு கடனுதவி வழங்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே கோரிக்கை முன்வைத்திருந்தார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையின் கடனுதவி கோட்பாடுகளுக்கு அமைவாக எரிபொருளை பெற்றுத் தருவதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்ததாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: