எனது நடவடிக்கை தவறானது என மாவையும், சம்பந்தனும் சொல்கிறார்கள்!

Tuesday, July 4th, 2017

வடமாகாண சபையில் அண்மையில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலையை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளுக்கு இடையில் கருதது முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், எனது நடவடிக்கை தவறானது என இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் குறிப்பிட்டிருந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “எனது நடவடிக்கை தவறானது என சம்பந்தனும் சேனாதிராஜாவும் தெரிவித்திருந்தனர். இந்த விடயத்தில் நான் தவறிழைக்கவில்லை என நான் அவர்களிடம் கூறியிருந்தேன்.

விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் பிரசன்னமாகியிருக்கும் போது சாட்சியம் வழங்குபவர் அவருக்கு எதிராக சாட்சிகளைக் கூறுவதற்கு அச்சமுறுவர். எனவேதான், சாட்சிகளின் மீதான நேரடியான அல்லது மறைமுகமான எந்தவொரு அழுத்தங்களையும் குறைக்க வேண்டிய நிலையிலிருந்தேன். இந்நிலையில் சாட்சியங்கள் மீது எவ்வித அழுத்தமோ அல்லது அவர்களை அச்சுறுத்துவதற்கான நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாது என்பதை எழுத்துமூலம் தருமாறு நான் கேட்டேன்.

ஆனால் சம்பந்தன் அதனை செய்யவில்லை. இவ்வாறான எழுத்துமூல உறுதிப்படுத்தலை சம்பந்தன் தந்திருந்தால் அதனை நான் ஏற்றுக்கொண்டிருப்பேன்.ஆனால் அவர்கள் இதில் விருப்பம் காண்பிக்கவில்லை. நான் அவர்களை விசாரணையின் போது அனுமதித்திருந்தால் சாட்சியங்களை வழங்கியவர்கள் அச்சமுற்றிருப்பர்.

இந்நிலையில், என் மீது இனவாதி என்ற முத்திரையைக் குத்தினால் அதற்கு என்னால் என்ன செய்ய முடியும்? எனது இரண்டு பிள்ளைகளும் சிங்களவர்களைத் தான் திருமணம் செய்துள்ளனர்.நான் கூட கொழும்பில் பிறந்து வளர்ந்தேன். இதன் பிறகும் நான் எவ்வாறு ஒரு இனவாதியாக மாறமுடியும்? இதிலிருந்து நான் எதனை அடைந்து கொள்ள முடியும்? இது முட்டாள்தனமான பேச்சாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: