எந்த நாட்டிலிருந்து ஆய்வுக் கப்பல்கள் வருகை தந்தாலும் ஆராய்ந்து பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கமையவே அனுமதி – அரசாங்கம்!
Friday, December 20th, 2024
இந்தியா, சீனா உட்பட எந்த நாட்டிலிருந்து ஆய்வுக் கப்பல்கள் வருகை தந்தாலும், அவை தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கமையவே அனுமதிக்க தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். ஆய்வுக் கப்பல்கள் குறித்து இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் இராஜதந்திர ரீதிலேயே நகர்வுகளை முன்னெடுக்கின்றோம்.
இவ்வாரம் சீனாவின் மருத்துவ கப்பலொன்று இலங்கை வரவுள்ளது. அக்கப்பல் எமது சுகாதார துறைக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கிலேயே விஜயம் செய்யவுள்ளது. அதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
ஆனால், ஆய்வுக் கப்பல்கள் வருகை தரும் போது, அவை எந்த நாட்டு கப்பல்களானாலும் அது குறித்து நாம் ஆழமாக ஆராய்ந்த பின்னரே அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்போம்.
அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடனுடன் கலந்துரையாடி விசாரணைகளை முன்னெடுத்து தீர்மானங்களை எடுப்போம்.
நீண்டகால இராஜதந்திர நோக்குடனேயே நாம் செயற்படுகின்றோம். ஆய்வுக் கப்பல் வருகை தொடர்பில் இதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எனவே, ஆய்வுக்கப்பல்கள் வருவதற்கான நோக்கம் குறித்து தெளிவாக ஆராய்ந்த பின்னரே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும். பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைக்கமைய அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|
|


