எதிர்வுகூறல்களை துல்லியமாக வழங்க மேலும் அதி நவீன வசதிகள் பெற்றுத்தரப்படும் – பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, June 30th, 2020

துல்லியமான வானிலை எதிர்வுகூறல்களை வழங்குவதற்காக புதிய உபகரணங்கள், பகுப்பாய்வு மென்பொருள் மற்றும் புதிய அமைப்புகள் என்பன விரைவில் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்..

வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர், குறைந்த வளங்கள் காணப்பட்ட போதிலும் அண்மைக்காலங்களில் மிகவும் துல்லியமான வானிலை எதிர்வுகூறல்களை வழங்கியமைக்காக அவர் திணைக்கள அதிகாரிகளை பாராட்டினார்.

பாதுகாப்பு செயலாளராக பதவியேற்றதிலிருந்து பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் திணைக்களங்களிற்கான தனது விஜயத்தில் இந்த திணைக்களத்திற்கு விஜயம் செய்திருந்தது இதுவே முதற்தடவையாகும்.

திணைக்களத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் பதில் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் ஏ.கே.கருணநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளுடன் தற்போதுள்ள திணைக்கள ரீதியான குறைபாடுகள், அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தொடர்பான முரண்பாடுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடியதுடன் அவை விரைவில் தீர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முறையான வானிலை ஆய்வுகள் 1867 ஆம் ஆண்டு அளவையியல் திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டன. பின்னர், 1909 முதல் இது கொழும்பு ஆய்வகத்தினால் தொடரப்பட்டது. வானிலை மற்றும் காலநிலை தொடர்பான சேவைகளை வழங்கும் முக்கிய நோக்கத்துடன் இந்தத் திணைக்களம் 1948 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இது தற்போது ஐந்து முக்கிய பிரிவுகளையும் 23 உப பிரிவுகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: