உறுதிப்பாட்டை தொடர்ந்தும் தலிபான்கள் மதிக்க வேண்டும் – ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் வலியுறுத்து!

Sunday, August 22nd, 2021

ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளதுடன், முன்னேற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலுள்ள நிலைமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்து வருவதே தமது முதன்மையான கவலையாகும் என்றும் குறித்த அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பினால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா, பாகிஸ்தான் முதலான நாடுகளின் அரசாங்கங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் தலிபான்கள் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதுடன், எந்த வெளிநாட்டினருக்கும் தீங்கு செய்யமாட்டோம் என உறுதியளித்துள்ளமையை தெரிவிப்பதில் இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்ற அதேவேளை, அந்த உறுதிப்பாட்டை தொடர்ந்தும் மதிக்குமாறும் தலிபான்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்லாமியப் பாரம்பரியத்தைப் பின்பற்றி ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொழில்களில் ஈடுபடலாம் என்பதுடன், பாடசாலைகளுக்கும் செல்லலாம் என தலிபான்கள் அளித்த உறுதிமொழிகளைக் கண்டு இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய பொறிமுறையொன்று நிறுவப்படும் என தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்கின்றது.

தற்போது தலிபான் ஆட்சியில் இருப்பதால், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை உறுதிப்படுத்துமாறும், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களினதும் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியத்திலும், சீர்குலைக்கும் விளைவை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பான இடத்தையும், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தையும் மேம்படுத்த முயலும் தீவிர மதவாதக் குழுக்களின் சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளதுடன்  அன்றாட நிலைமைகளை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது..

இதேவேளை சார்க் உறுப்பு நாடு என்ற வகையில், இது சம்பந்தமாக எந்தவிதமான பிராந்திய முயற்சிகளுக்கும் உதவுவதற்கு, இலங்கை தமது பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளதெனவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: