இலங்கையில் நீரிழிவு நோயாளிகளே கொரோனா தொற்றால் அதிகம் உயிரிழந்துள்ளனர் – கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவிப்பு!

Saturday, January 22nd, 2022

இலங்கையில் கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களில் 52% இற்கும் அதிகமானவர்கள் நீரிழிவு நோயாளிகள் என இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமணதிலக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் கொரோனா தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் –

“நீரிழிவு நோய் மற்றும் பிற தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எந்த நோயும் இல்லாதவர்களை விட, இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது அநேகமாக முன்கணிப்பை விட பத்து மடங்கு அதிகமாகும்.

ஏனைய நாடுகளின் புள்ளிவிவரங்களுக்கு அமைய, 60 வயதுக்கு மேற்பட்ட இறப்புகளில் 84 வீதம் நீரிழிவு மற்றும் பிற தொற்றாத நோய்களால் ஏற்பட்டுள்ளது.

இதனால், இலங்கையில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற தொற்றாத நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.

நீரிழிவு நோயாளிகளின் உடலுக்குள் வைரஸ் நுழைந்தவுடன் மூச்சுக்குழாய், கணையம், இதயம் உட்பட ஏனைய உறுப்புகளுக்குள் ஏனையவர்களின் உடலை விட வேகமாக நுழைகிறது.

அவர்களுக்கு நோயினால் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம், வழக்கமான சுவாசக் கோளாறுகள் தவிர திடீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் அவர்கள் இறக்க நேரிடுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: