இலங்கையில் நல்லிணக்க முயற்சி, பயங்கரவாதத் தடை சட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கம்!

Saturday, October 2nd, 2021

இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீளாய்வு, சிவில் சமூகத்துடனான ஈடுபாடு, நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் சபையுடனான இலங்கையின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஐரோப்பிய தூதுக்குழுவுக்கு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுடன் நேற்றையதினம் நடைபெற்ற சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும்  ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்புடன் தொடர்பான விடயங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் புதுப்பிக்கப்பட்ட தகவல்களையும் வழங்கியிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் உறவுகள் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உட்பட பரந்த அளவிலானதும் மற்றும் பரஸ்பரம் நன்மை பயப்பதுமாகும் என அமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக இருப்பதால் ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையின் நேர்மறையான பங்களிப்பையும்,  நாட்டின் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அதன் நன்மைகளையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

அமைச்சருடனான கலந்துரையாடல்களில், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பலதரப்பட்ட ஈடுபாட்டை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் தூதுக்குழு, தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதற்கு உறுதி செய்தது.

இந்த விஜயத்தின் போது, ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு செயன்முறை மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மூன்றாம் சுழற்சி மீளாய்வு செயன்முறை தொடர்பான சந்திப்புக்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு பங்கேற்றது.

இந்த சந்திப்புககளில் 30 க்கும் மேற்பட்ட வரிசை முகவர்களைக் கொண்ட அரசாங்கத்தின் பரந்த அளவிலான பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்

இந்தத் தூதுக்குழுவானது, ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கியிருந்ததுடன், இந்த விஜயம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: