இந்திய அரசாங்கத்தால் தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு!

Thursday, March 23rd, 2017

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு தேவையான குடிநீர் விநியோகத்துக்காக இந்திய அரசாங்கத்தினால் தண்ணீர் பௌசர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்தினால் 08 தண்ணீர் பௌசர்கள் குறித்த தண்ணீர் பௌசர்களுக்கான ஆவணங்கள் மற்றும் சாவிகள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டன.

16 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சி காரணமாக கடுமையான குடிநீர் பற்றாக்குறைக்கு முகம்கொடுத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், குடிநீர் வழங்கலுக்காக 4.52 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அயலிலுள்ள நட்பு நாடென்ற வகையில் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்தியா வழங்கிய அன்பளிப்புக்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா இந்திய அரசாங்கத்துக்கு இதன்போது நன்றி தெரிவித்தார். நீரை சுத்திகரிப்பு செய்து, தூய்மையான குடிநீராக மாற்றும் நவீன வசதிகளுடைய புதிய நீர் சுத்திகரிப்பு கருவியை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

BRJW தனியார் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கருவி மூலம் எவ்வாறான நிலையிலுள்ள அசுத்த நீரையும் சில கணப்பொழுதில் தூய குடிநீராக மாற்றக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த கருவி பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும்.

Related posts: