ஆள்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள் – பொலிஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுநலன் விரும்பிகள் கோரிக்கை!

Tuesday, August 29th, 2023

யாழ்ப்பாணம் நகர் பகுதி,  மற்றும் புறநகர் பகுதிகளில் ஆள்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள் , அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்கள் அற்று , பாழடைந்த வீடுகளில் மாலை வேளைகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையான கும்பல்கள் , அந்த வீடுகளில் கும்பல் கும்பலாக போதை பொருட்களை நுகர்ந்து கொள்கின்றனர்.

அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால் , அவ்வீடுகள் அமைந்துள்ள வீதிகளால் பயணிப்போர் அச்சத்துடனையே பயணிக்கின்றனர்.

யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில் , ஊசி மூலம் போதைப் பொருளை உட்செலுத்தி கொள்வர் , அதிகளவில் போதையை உட்செலுத்துவதாலும், தொடர்ந்து போதையை நுகர்வதால் கிருமி தொற்றுக்கு இலக்காகியும் உயிரிழப்புக்கள் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளமையால் ,சந்தேகத்திற்கு உரிய இடங்களில் பொலிஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் , போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

அதேவேளை இன்னுமொரு இளைஞனும் போதைக்கு அடிமையான நிலையில் , உடலில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: