ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பில் அதிக அக்கறை காட்டுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வல்யுறுத்து!
Thursday, June 20th, 2024
கொவிட் காலத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அன்றைய நிர்வாகத்தினர் தவறான நபர்களுக்கு செவிசாய்த்ததன் காரணமாகவே நாட்டில் கொவிட் தொற்று அனர்த்தமாக பரவியதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க சுட்டிக்காட்டுகிறார்.
ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவில் பரவி வரும் உடலை அரிக்கும் கொடிய பாக்டீரியாக்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான வீதிகளான விமான நிலையம் மற்றும் துறைமுக நுழைவாயில்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பில் அதிக அக்கறை காட்டுமாறும், சில அறிகுறிகள் உள்ளவர்களை பரிசோதிப்பதற்கு தேவையான பரிசோதனை நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.
எக்காரணம் கொண்டும் இந்த கொடிய பக்டீரியா இலங்கைக்கு வருமாயின் அரசாங்கம் நிபந்தனையின்றி சுகாதார துறைக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்க வேண்டும் எனவும் மருந்துகள் தேவைப்படின் அவசர கொள்வனவு முறையை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இதுவரை எமது நாட்டில் இந்த பக்டீரியா தொற்றினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில் மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வீதி ஆலோசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் வைத்தியர் சமில் விஜேசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
000
Related posts:
|
|
|


