அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களின் தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது சொத்து பிரகடனத்தை தொழில் அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்!

Thursday, April 6th, 2023

சொத்து பிரகடன சட்டத்திற்கமைய அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களில் தொழிற்சங்க உறுப்பினர்கள் வருடாந்தம் தமது சொத்து பிரகடனத்தை தொழில் அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும் இதுவரையில் எந்தவொரு தொழிற்சங்க தலைவர்களும் அவ்வாறு தமது சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பித்ததில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அவர்களின் சொத்து மதிப்பு பிரகடனத்தை பெற்றுக் கொள்வதற்கு தொழில் அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

சொத்து மதிப்பு பிரகடன சட்டத்திற்கமைய சகல தொழிற்சங்க தலைவர்களும் தமது சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

தொழிற்சங்கங்களில் 20 – 30 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளவர்கள் ஒரு நாளில் கூட தமது தொழிலை செய்ததில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் , அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் 20 – 30 ஆண்டுகளாக எந்தவொரு வேலைகளையும் செய்யாது சம்பளம் வழங்கப்படுகின்றமை சரியா தவறா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்கள் மக்களின் வரிப்பணத்தில் பேணப்பட்டு, அதற்குள் கூட்டு ஒப்பந்தங்களை செய்துகொண்டாலும் நஷ்டத்தையே சந்திக்கும் நிலையில் இலட்சக்கணக்கானவர்களுக்கு மேலதிக நேர வேலை வாய்ப்புகளை வழங்குவது நியாயமா என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: