அரசியல் பழிவாங்கல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு நிவாரணம்: அறிக்கை தயார்!

Thursday, March 24th, 2022

“நல்லாட்சி” அரசாங்கத்தின் கீழ், அரசியல் பழிவாங்கல் நோக்கில், அரச மற்றும் பகுதியளவு-அரச பணியாளர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச பணியார்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை –

ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வா அவர்கள் இன்று அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளித்தார்.

அதன்படி, இந்தக் குழுவின் அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பிரதமர் உடனடியாகத் தனது அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட, 2021 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் – 2021 செப்டெம்பர் 07 ஆம் திகதி அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க, இந்த குழு 2021 செப்டெம்பர் 10 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையில் நிறுவப்பட்ட இக்குழுவில் –

ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்க்ஷ, ஜனாதிபதி சட்டத்தரணி வி. கே. சோக்சி, கணக்காளர் கே. எஸ். சந்திரபால டி சில்வா, ஓய்வுபெற்ற அரச கணக்காளர் எச். டி.  திருவீரசிறி ஆகியோர் சக உறுப்பினர்களாக செயற்பட்டனர்.

அதன் குழு செயலாளராக பிரதமர் அலுவலகத்தின் சட்ட பணிப்பாளர் சட்டத்தரணி தக்ஷித தேவபுர அவர்கள் செயற்பட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் அரச மற்றும் பகுதியளவு-அரச ஊழியர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு –

ஏற்படும் செலவுகள், மனதளவில் மற்றும் சமூக மட்டத்திலான அவர்களது கஷ்டங்களை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவதே இதன் நோக்கமாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் – குழுவின் தலைவர் அசோக டி  சில்வா, குழு உறுப்பினர்களான நிஹால் சுனில் ராஜபக்க்ஷ, வி. கே. சோக்சி, குழுவின் செயலாளர் கே. எஸ். சந்திரபால டி சில்வா, பிரதமர் அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர், சட்டத்தரணி தக்ஷித தேவபுர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

000

Related posts: