அமெரிக்க – இலங்கை நட்புறவின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட இலங்கை வருகின்றார் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர்!

Saturday, January 28th, 2023

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஜனவரி 28 முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

துணைச் செயலாளர் நூலண்ட், அமெரிக்க கூட்டுறவின் பரந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நேபாளத்தின் புதிய அரசாங்கத்துடன் செயற்பாடுகளில் ஈடுபடுவார் என அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவிற்கான விஜயத்தின் போது, அமெரிக்க-இந்திய வருடாந்திர “வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகளுக்கு” துணைச் செயலாளர் தலைமை தாங்குவார்.

இது முழு அளவிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை உள்ளடக்கியது. இதுதவிர, இந்தியாவின் இளம் தொழில்நுட்பத் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அவர் அமெரிக்க-இலங்கை நட்புறவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை உறுதி செய்வார்.

இறுதியாக, கட்டார் இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ள அவர் அமெரிக்க-கட்டார் மூலோபாய உரையாடல் கட்டமைப்பின் கீழ் அவர் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்.

அமெரிக்காவுடனான உறவுகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்கான இருதரப்பு ஏற்பாட்டுடன் ஆப்கானியர்களின் இடமாற்றத்திற்கு கட்டாரின் பங்களிப்பையும் பெறுவதற்கு முயற்சிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: