அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை – படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிப்பு!!

Thursday, September 2nd, 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்கு இலக்காகி வரும் நிலையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 06ஆம் திகதி அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பணியாளர்கள், நாடாளுமன்ற ஊடகவியலாளர்களும் இதன்போது அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு விருப்பம் என்றால் மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 06ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இந்த தினத்தில் காலை 9.30 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சேவையை பாதுகாப்பாக முன்னெடுப்பதற்கு இவ்வாறு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

இதனடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், ஊடகவியலாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அடுத்தவாரம் 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களும் நாடாளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: