அதியுச்ச பாதுகாப்பு வளையத்துள் கொழும்பு – 12 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மாறக்கூடும் – பிரபல ஜோதிடர் கணிப்பு!

Friday, July 8th, 2022

நாளை 9 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகவேண்டும். எனக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ள நிலையில் கொழும்பில் பாதுகாப்பு உச்ச அளவில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பின் பாதுகாப்புக்கு 8 ஆயிரம் பொலிஸாரும், இராணுவத்தினரும் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அதேசமயம் தற்போதும் கொழும்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கு மேலதிகமாக இந்த 8 ஆயிரம் பேரும் அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் படிப்படியாக கொழும்பு நோக்கி வருகை தருவதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்தன.

மேலும் 3 ஆயிரம் பொலிஸாரும். 5 ஆயிரம் இராணுவத்தினரும் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு பாதுகாப்பு பணிகளுக்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் என பிரபல ஜோதிடர் ஜோதிர்வேதி கே.ஏ.யு. சரச்சந்திர தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை ஜூலை 09 ஆம் திகதி மற்றும் அன்றைய தினத்துடன் தொடர்புடைய சில நாட்களில் மிகவும் தீவிரமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜுலை 9 ஆம் திகதி உட்பட ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். எவ்வாறாயினும், ஜூலை 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய உள்ளட்ட முக்கியஸ்தர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொள்ள கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். எரிபொருள், எரிவாயு உள்ளிட்டவைகளுக்க கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியிருந்தார். அதனை தொடர்ந்து முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பதவி விலகினர்.

எனினும், இலங்கையின் நிலை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றுள்ளது. நாளையும், நாளைமறுதினமும் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையிலேயே எதிர்வரும் 12 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் என பிரபல ஜோதிடர் ஜோதிர்வேதி கே.ஏ.யு. சரச்சந்திர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: